- சினிமா செய்திகள்

அழகான, கவித்துவமான காதல் படமாக உருவான ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’!

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.

மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி. ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், எங்களை வாழ்த்த வந்த தனஞ்செயன் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி.”

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது..,

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.

கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.

படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.

குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாகஉருவாகியுள்ளது.

ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.

தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan