- பொது

கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது!

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுக் கூட்டம் தமிழ்நாடு காவல்துறையினரால் நடத்தப்பட்டது.

அண்ணா நகர் சரகத்திற்கு உட்பட்ட துணை ஆணையர், உதவி ஆணையர், காவல்துறை மேலதிகாரிகள் மற்றும் காவலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முகக்கவசத்தை எவ்வாறு அணிய வேண்டும், அதனை எவ்வாறு அகற்ற வேண்டும், கிருமி நாசினி கொண்டு எவ்வாறு கைகளைச் சுத்தம் செய்யவேண்டும், எப்போதெல்லாம் கைகளைச் சுத்தம் செய்யவேண்டும், பொதுமக்களிடம் தன்மையாக நடந்துகொண்டு, அவர்களுக்கும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கூட்டத்தில் பரிமாறிக்கொண்டனர்.

நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் பணியில் இருக்கும் காவல்துறையினரின் இத்தகைய விழிப்புணர்வுக் கூட்டம், வேலம்மாள் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

About expressuser

Read All Posts By expressuser