- பொது

தூய்மை பணிகளுக்காக வாகனம் வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட்!

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் திரு. சிவகுமார் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின்  2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் திரு. சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். இதன்போது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். தன்னலமற்ற இவரது சமூக சேவையை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகிறார்கள்.

About expressuser

Read All Posts By expressuser